Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

ஹமாஸ் இயக்க அரசியல் தலைவர் யெஹ்யா சின்வாரின் காஸா வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல்

 



காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவர் யெஹ்யா சின்வாரின் வீட்டை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.


கட்டடமொன்று சிதைவடையும் காட்சி அடங்கிய வீடியொ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. எனினும் இத்தாக்குதலில் யெஹ்யா சின்வார் கொல்லப்பட்டாரா என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

அதேவேளை மேற்படி தாக்குதலிலவ் 17 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை நடந்து வரும் மோதல்களில் இதுவரை பலஸ்தீனத்தின் காஸாவில் 174 பேரும் இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்விரு தரப்புக்கும் இடையிலான பாரிய மோதலாக இது உள்ளது.

அல் ஜஸீரா மற்றும் அசோஷியேட்டட் பிரஸ் (ஏபி) ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த, 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் இஸ்ரேலின் தாக்குதலில் சனிக்கிழமை தரைமட்டமாகியமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி மூலம் சனிக்கிழமை உரையாடியுள்ளார். இஸ்ரேலிலும் காஸாவிலும் அதிகரித்துள்ள வன்முறைகள் குறித்து ஜோ பைடன் கவலை தெரிவித்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேவையேற்படும் வரை காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு சனிக்கிழமை கூறியுள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு முடிந்தவரை முயற்சிக்கப்படுவதகாவும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »