Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிக்கும் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதார அமைச்சின் செயலர் எழுத்துமூலம் அறிவிப்பு.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிடுவது தாபன சட்டக்கோவையின் பிரகாரம் குற்றம் எனவும் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக இனிமேல் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அறிவித்துள்ளார்.


அனைத்து மாகாண சுகாதார செயலர்கள், சுகாதார அமைச்சின் கீழ்வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கல் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களையும் விழித்து ‘ ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல்’ எனும் தலைப்பில் அவர் அனுப்பியுள்ள அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.


அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் அதனை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, இனிமேல் அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிடும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாபன விதிக் கோவையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »