இலங்கையில் நாளைய தினம் முதல் வீடுகளை விட்டு வெளியேறுவோர் கட்டாயம் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாளைய தினம் முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, மக்கள் வீதிகளுக்கு வருகைத் தர வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
வீடுகளை விட்டு வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறு அவர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றையேனும் கொண்டு செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார்.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அடையாள அட்டை இலக்கங்களின் பிரகாரம் மாத்திரமே வெளியில் வர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
தேசிய அடையாளஅட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1,3,5,7,9) இருக்கும் பட்சத்தில், ஒற்றை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றின் இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாக (2,4,6,8,0) இருக்கும் பட்சத்தில், இரட்டை இலக்கத்தை கொண்ட திகதிகளில் மாத்திரமே அவர்களினால் வெளியில் வர முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அனைத்து இலங்கை பிரஜைகளும் கட்டாயம் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, கடமைகளுக்கு எவரேனும் ஒருவர் செல்வாராயின், இந்த நடைமுறை அவர்களுக்கு செலுப்படியாகாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நடவடிக்கை நாளை (17) முதல் இந்த மாத இறுதி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.
