Our Feeds


Sunday, June 20, 2021

www.shortnews.lk

பங்காளிக் கட்சிகளை அரசாங்கத்திலிருந்து நீக்க சூழ்ச்சி நடக்கிறது - முழு அரசாங்கத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவந்திருக்க வேண்டும். - அமைச்சர் தயாசிரி கடும் தாக்கு.

 



(எம்.மனோசித்ரா)


பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்த ஏனைய கட்சிகளை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதே நிலைமையை எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்படக் கூடும் என்று அதன் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அன்றி, முழு அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தது அமைச்சர் உதய கம்மன்பில அல்ல. நிதி அமைச்சினாலேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி அமைச்சருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பதை ஒரு நபர் மீது மாத்திரம் சுமத்துவது பொருத்தமற்றது. எனவே நம்பிக்கையில்லா பிரேரணை முழு அரசாங்கத்துக்கு எதிராகவும் கொண்டு வரப்பட வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவரும் எதிர்கட்சியும் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரவில்லை. இதனை அனைவரும் அறிவார்கள்.

தற்போது அரசாங்கத்துக்குள் பாரிய சதியொன்று முன்னெடுக்கப்படுகிறது. தேர்தலின் போது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்ட பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்துக்கு வலு சேர்த்த கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்திலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் வெளியேற்றுவதற்கான இந்த செயற்பாடுகள் தொடருமாயின் எதிர்காலத்தில் இதே நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்படக் கூடும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »