இந்தியாவில் மிக வேகமாக பரவிவரும் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர், சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எழுமாறாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாகவே, இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினாலேயே, மேலும் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வைரஸ் தொற்றானது, சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், ஒரு மாத காலப் பகுதிக்குள் வேமாக பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதை அடுத்தே, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
நாடு மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமாயின், தளர்த்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் போது, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், டெல்டா வைரஸ் பரவலானது, சுமார் 60 முதல் 70 வீத வேகத்தில் பரவும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சூழ்நிலையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியை பின்பற்றவது அத்தியாவசியமானது எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையிலுள்ள 86,000 கட்டில்களை தாண்டி நோயாளர்கள் பதிவாகும் பட்சத்தில், பாரிய பிரச்சினை ஏற்படும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவிக்கின்றார்.