காபனிக் பசளை என்ற பெயரில் சீன நகர கழிவுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத முடிவுகளால் விவசாய உற்பத்திக்கு பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது. இரசாயனப் பசளைகளின் இறக்குமதிகளை கைவிட எடுத்த தீர்மானத்தால் நெல் அறுவடை மற்றும் சிறு உற்பத்தி அறுவடைத் துறைக்கு பாரிய ஆபத்து நேரிட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் அவர்களுக்கு தேவையான இரசாயனப் பசளை இல்லை என தெரிவித்து போராட்டங்களை மேற்கொள்ளும்போது, இரசாயன பசளைக்கு பதிலாக காபனிக் பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.
சீன நகர கழிவுகளை காபனிக் பசளைகளாக இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அரசாங்கம் முடிவெடுக்குமாக இருந்தால் அதன் ஆபத்துகளின் பின்விளைவுகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேரிடும் துறைசார் நிபுணர்கள் தற்போதே சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனா போன்ற நாட்டிலிருந்து காபனிக் பசளையாக நகர் புற கழிவுகள் இறக்குமதி செய்வது, நிலத்திற்கு மாத்திரமல்லாது மனிதர்களை பாதிக்கும் பக்டீரியாக்கள் கூட தாக்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன?
இந்த வேலைத் திட்டத்தையும் தமது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கியுள்ளதால் இதன் நோக்கம் சரியாக வெளிப்படுகிறது. சீனக் குப்பைகளை நாட்டிற்கு கொண்டு வந்தேனும் தனது நெருங்கிய நண்பர்களின் எதிர்கால பொருளாதார நலன்களை வலுப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.
