கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்ட மிக அபாயகரமான டெல்டா (B.1.617.2) வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதா என்பது தொடர்பான விரிவான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் பிரிவின் பேராசிரியர் விசேட வைத்தியர் டொக்டர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மிக அபாயகரமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 கொவிட் வைரஸ்களில், டெல்டா வைரஸும் ஒன்று என அவர் கூறுகின்றார்.
அபாயகரமான 4 கொவிட் வைரஸ் இனங்கள்
- பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட அல்பா
- தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட பீட்டா
- பிரேஸிலில் அடையாளம் காணப்பட்ட கஃபா
- இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ், பிரித்தானியா உள்ளிட்ட 80 நாடுகளில் பரவியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
கொழும்பு − தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸானது, நாட்டின் வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளதா என்பது குறித்த விரிவான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக, முதற்கட்ட ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதன் ஊடாக, இந்த அபாயகரமான வைரஸினால் ஏற்படும் உயிராபத்துக்களில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த தடுப்பூசிகளில் இரண்டு மருத்தளவுகளையும் (DOSE) பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறான வீரியம் கொண்ட வைரஸாக இருந்தாலும், அவை பரவும் விதத்தில் மாற்றம் கிடையாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
