(செ.தேன்மொழி)
தெற்கு பகுதியில் மூன்று வாரகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 52 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் தலைமையகத்தின் , திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மூன்று வாரகாலம், விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலி , ஹிக்கடுவை, அஹங்கம மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலேயே இந்தசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய இரு வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் , சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் அவர்களை விஷ போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடத கட்டளைச் சட்டவிதிகளுக்கு கீழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும் எதிர்பார்த்துள்ளனர்.
