நாட்டில் சிறுவர்கள் மத்தியில் பூனை மற்றும் நாய்கள் மூலம் டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) எனப்படும் புழு நோய் தாக்கம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, இன்று (18) தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், வீட்டில் உள்ள சிறுவர்கள் பூனைகள் மற்றும் நாய்க் குட்டிகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
இந்நிலையில், பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த புழு தோற்றம் பெறுவதாக வைத்தியர் தெரிவித்தார்.
அத்துடன், அவ்வாறான விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாவதுடன், ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும் என அவர் கூறியனார்.
பின்னர் அந்தப் புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த அவர், இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு மருந்துகளை கொடுப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
