(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 27 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 10 பேர் இம்மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸாரின் பெரும்பாலனவர்கள், கொவிட் நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று வரையிலான காலப் பகுதியில் ( 27 வரை) 10 பொலிஸார் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் கித்துல்கல, கலஹா, தெமட்டகொடை, காலி, முகத்துவாரம், உடுகம, அம்பன்பொல, தேசிய பொலிஸ் கல்லூரி, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றியவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இந்நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 27 பேரில், ஒரு பிரதான பொலிஸ் பரிசோதகரும், ஒரு பொலிஸ் பரிசோதகரும் அடங்குவதுடன் உப பொலிஸ் பரிசோதகர்கள் 6 பேர், 13 பொலிஸ் சார்ஜன்ட் கள், 6 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குகின்றனர்.
கொவிட் -19 நிலைமை காரணமாக உயிரிழந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், தேசிய பொலிஸ் கல்லூரியில் சேவையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் வீ.எம்.ஏக்கநாயக்க எனும் அதிகாரி என்பதுடன் கடந்த 10 ஆம் திகதி அவரது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா காரணமாக பொலிஸ் திணைக்களத்தின் முதல் உயிரிழப்பு கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி பதிவாயிருந்ததுடன், மொனராகலை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் பி.ஜீ. அந்திரிஸ் அப்பு எனும் உத்தியோகத்தர் அப்போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
