Our Feeds


Sunday, August 29, 2021

www.shortnews.lk

JUST_IN: சீனி விலை எப்போது குறையும்? - அமைச்சர் அழகியவன்ன பதில்

 



(இராஜதுரை ஹஷான்)



உலக சந்தையில் சீனியின் விற்பனை விலை அதிகரித்துள்ளதால் தேசிய மட்டத்தில் சீனி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வார காலத்துக்குள் சீனியின் விலை குறைக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

சந்தையில் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள சீனி விலை மற்றும் மாற்று நடவடிக்கை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனிக்கான நிர்ணய விலை ஆரம்பத்தில் 85 ரூபாவாக காணப்பட்டது. பின்னர் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சீனியின் நிர்ணய விலை நீக்கப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது சீனியின் விற்பனை விலை சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளது.

தேசிய மட்டத்தில் சீனியின் விற்பனை விலை அதிகரித்துள்ளமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உலக சந்தையில் சீனியின் விற்பனை விலை அதிகரித்துள்ளமை, டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமை உள்ளிட்ட காரணிகளினால் சீனி இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டொலர் பெறுமதி அதிகரித்த காரணத்தினால் துறைமுகத்தில் 400 அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காரணிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், ஒரு சில உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

டொலர் பெறுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் சீனியின் விற்பனை விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள். இறக்குமதியாளர்கள் தரப்பில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், துறைமுகத்தில் சிக்குண்டுள்ள 400 கொள்கலன்களை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் இரண்டு வார காலத்திற்குள் சீனியின் விற்பனை விலை குறைக்கப்படும்.சீனிக்கான நிர்ணய விலையை தீர்மானிக்க வர்த்கத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை காணப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தில் காணப்படும் ஒரு சில விடயங்களை விரைவாக திருத்த அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »