தன்னை யாரும் கன்னத்தில் அறையவில்லை என்று பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைத்தளமொன்றில் நடந்த நேர்காணலின் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது இசைப்பயணத்தை வலுப்படுத்தவே பதவிகளிலிருந்து விலகி ஓய்வுபெற்றிருப்பதாகவும் இராஜ் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான செயற்பாடுகளுக்கு தன்னால் பொறுப்புக்கூற முடியாது என அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்ற சமூக அக்கறையுடன் செயற்பட்டதாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் கண்மூடித்தனமாக செயற்படுவதாகவும் இராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மேலும் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“காரணம், இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அதற்கு சரிவர பின்பற்றவில்லை. இதனால் கடுமையான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் எடுக்கின்ற சில தீர்மானங்கள் குறித்து நான் அதிருப்தி அடைந்துள்ளேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இது தொடர்பில் இராஜ் வீரரத்ன, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹானி இமாராவும் கடந்த வருடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
