Our Feeds


Monday, September 6, 2021

www.shortnews.lk

BREAKING: அவசரகால சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம் - ஆதரவாக 132 வாக்குகள் எதிராக 51

 



கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகளை இயல்பான நிலையில் முன்னெடுக்கும் வகையில், அவசரகால சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.


இது தொடர்பான பிரேரணைக்கு இன்று நாடாளுமன்றத்தில்  132 வாக்குகள் ஆதரவாகவும் 51 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.இதன்படி 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30 ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை இன்று (06) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதித்து சபையில் அனுமதிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 02வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த அவசரகால சட்ட ஒழுங்குவிதி அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக மாத்திரம் ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த கேள்விகளைப் பிறிதொரு தினத்தில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (07) முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »