கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தப் பணிகள், நாடு திறக்கப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சை பெறுபேறுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், பரீட்சை விடைத் தாள் மீள் திருத்தப் பணிகள் குறித்து இதுவரை திணைக்களம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
எனினும், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக விடைத் தாள்களை மீள் திருத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்டதன் பின்னர், இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு பரீட்சை பெறுபேறுகள் கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் சில தினங்களில் அதனை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் குறிப்பிட்டார்.