லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் தற்போது நிர்வகிக்கப்படும் திருகோணமலையிலுள்ள 14 எண்ணெய் குதங்களை 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு குறித்த எண்ணெய் குதங்களை அவ்வாறே குத்தகைக்கு வழங்கப்படும் என்பதுடன் மேலும் 61 எண்ணெய் குதங்கள் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ட்ரிங்கோ பெட்ரோலியம் டர்மினல்ஸ் நிறுவனத்தின் கீழ் கூட்டாக நிர்வகிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.
இந்த புதிய நிறுவனம் 51 சதவீத பகுதி இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாகும் என்பதுடன், மேலதிக 49 சதவீத பகுதியின் உரிமம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்த புதிய நிறுவனத்தின் ஸ்ரீ லங்கா அல்லது தற்போது நாட்டில் எண்ணெய் பகிர்ந்தளிப்பு பணிகளை முன்னெடுக்கும் நிறுவனம் பயன்படுத்தும் சிலோன் என்ற பெயரை நீக்குவது தொடர்பில் அரசியல் மட்டத்தில் பெரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு முன்னா், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு 30 வருடத்துக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது.
திருகோணமலையில் 123 ஏக்கர் நிலப்பரப்பில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் கட்டப்பட்ட இந்த எண்ணெய் தாங்கி வளாகத்தில் 91 பாரியளவிலான தாங்கிகள் உள்ளன.
அதில், சுமார் 75 எரிபொருள் தாங்கிகள் இன்னும் நல்ல நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளாா்.