Our Feeds


Sunday, January 16, 2022

ShortNews

4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுங்கள்

 


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், மின் வெட்டை எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எதிர்வு கூறுகின்றது.

நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு, பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அந்த சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவிக்கின்றார்.

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


 
இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை அமுல்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எதிர்வு கூறுகின்றார்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும், அதனால் நீர் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தல் ஆகிய காரணங்களினால், மின் வெட்டு அமுல்படுத்தும் சந்தர்ப்பங்களில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவிக்கின்றார். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »