பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி கட்டளை பிறப்பிப்பதாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெல்லியடியிலுள்ள வைத்தியசாலையொன்றில், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தையலிட்டிருந்தனர்.
இதனால் அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, நீதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்தார்.
கரவெட்டி, யார்க்கரு பகுதியை சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (60) என்ற பெண், கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கர்ப்பப்பையை அகற்றுமாறு வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நெல்லியடி, முடக்காடு பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு சென்றிருந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் வைத்தியர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர்.
சிகிச்சையின் பின் வீடு திரும்பிய பெண் நோய்வாக்ப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்திருந்ததால் 11ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் நேற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, உடலுக்குள் மருந்து கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் துண்டு காணப்பட்டது. 50 சென்றிமீற்றர் நீளமும் 10 சென்றிமீற்றர் அகலமும் கொண்ட அந்த துண்டு அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக உடலுக்குள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.
அந்த துண்டு இருந்த பகுதியில் குடல் பழுதடைந்துள்ளது. அந்த துண்டினால் ஏற்படட கிருமித் தொற்று காரணமாகவே பெண் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.