துறைமுகங்களை நிர்மாணித்து இந்த
நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி
செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் தெரிவித்தார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திர
நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும்
நிகழ்வில் இன்று (12)
முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இவ்வாறு குறிப்பிட்டார்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அவர்களினால் கிழக்கு முனையத்தின்
நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து
வைக்கப்பட்டதுடன், நிர்மாணப்
பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் கௌரவ
ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு முனையத்தின்
செயற்பாடுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழே முன்னெடுத்து சென்று இவ்வாறு
அபிவிருத்தி செய்யப்படும் முனையத்தின் முழு நீளம் 1320 மீட்டராகும். பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் 2024 ஜுலை
மாதமளவில் நிறைவுசெய்யப்படும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு
முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உங்களுடன் இணைந்து கொள்வதில்
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்தருணத்தில் நமது நாட்டில் துறைமுகங்கள்
நிர்மாணிக்கப்பட்ட கடந்த காலம் நினைவிற்கு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த
பின்னர் எமது நாட்டில் புதிதாக துறைமுகமொன்றை நிர்மாணிக்க வேண்டும் என எண்ணியது 2005ஆம்
ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கமே என்பதை கூற விரும்புகிறேன்.
உலகின் மிக மோசமான
பயங்கரவாதிகளுடன் எமது நாடு போரிட்டுக் கொண்டிருந்த போதே நாம் ஹம்பாந்தோட்டை
துறைமுகத்தை நிர்மாணிக்க தீர்மானித்து பணிகளை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்கு
நினைவிருக்கலாம். அன்று புதிதாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்பட்ட போது பல விமர்சனங்கள் எழுந்திருந்தமை ரோஹிதவிற்கு நினைவிருக்கும்.
அப்போதிருந்த வெளியுறவுத்துறை
அமைச்சர் துறைமுக நிர்மாணம் குறித்த விடயத்தை சீனாவுடன் கலந்துரையாடும்
பட்டியலிலேனும் சேர்க்க விரும்பவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாறை
இருப்பதாகவும் அதனால் கப்பல்கள் வர முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தமை
எனக்கு நினைவிருக்கிறது.
அன்று அவ்வாறானதொரு நிலைமையே
காணப்பட்டது. நாம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொருத்துக் கொண்டு அவற்றுக்கு
முகங்கொடுத்து புதிதாக துறைமுகமொன்றை நிர்மாணித்தோம். அன்று துறைமுகத்தின்
நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்கும் அங்கு நீர் நிரப்பப்படுவதை
பார்வையிடுவதற்கும் எமது நாட்டு எவ்வாறு வந்தார்கள் என்பது உங்களுக்கு
நினைவிருக்கும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்
மட்டுமல்ல. கொழும்பு தெற்கு துறைமுக முனையம் மற்றும் ஒலுவில் துறைமுகமும் நிர்மாணிக்கப்பட்டது.
நான்கு வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். நெடுஞ்சாலைகள்
நிர்மாணிக்கப்பட்டன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்னும் அதிகமாக
செய்துவருகிறார். விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன. 2015ஆம்
ஆண்டுக்குப் பின்னர் இந்த பாரிய அபிவிருத்திகளை விமர்சித்தவர்களினால் நாடு
கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த
துறைமுகம் விற்கப்பட்டது. ஆனால் விற்கும் போது கல் இல்லை.
அப்போது இந்த நாட்டை கடல்சார்
கேந்திர மாற்ற விரும்பினோம். துறைமுகங்களை நிர்மாணிப்பதன் மூலம் எமது நாட்டை ஆசியாவின்
பெரும் வல்லரசாக முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டோம். நாங்கள் இன்னும்
நம்பிக்கையை கைவிடவில்லை.
அன்று எனக்கு கீழ் இருந்த
முன்னாள் துறைமுக இராஜாங்க அமைச்சரே இன்றும் அமைச்சராக இருப்பதாக நான்
நம்புகிறேன். தற்போது துறைமுக அமைச்சராக உள்ளார். அப்போது துறைமுகத்திற்கு வந்த
தடைகளை நன்கு அறிந்த,
அவற்றுக்கு பதிலளித்த ஒருவர். இன்று அமைச்சர் என்ற வகையில் துறைமுகம் குறித்த
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறித்து நாம்
மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்வாறானதொரு இக்கட்டான
சூழ்நிலையில் ஏன் இவ்வளவு கடினமான பணியைத் தொடங்குகிறீர்கள் என்று சிலர்
கேட்கிறார்கள். நம் நாட்டில் பல அரசாங்கங்கள் சிரமங்களின் முன்னிலையில்
பின்னோக்கிச் சென்ற அரசுகளாகும். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் காரணமாக 1977ஆம் ஆண்டு
தொடக்கம் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு எல்லைக்கு அருகில்
அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க அஞ்சுகின்றன. உங்களுக்கு நினைவிருக்கிறது.
அன்று நுரைச்சோலை அனல்
மின்நிலையத்தை அமைப்பதற்கு விரும்பவில்லை. அவ்வாறு யுத்தத்தை நிறைவுசெய்ய முடியும்
என எதிர்பார்க்கவில்லை.
எனினும் நாம் யுத்தம்
இடம்பெற்றக் கொண்டிருந்தபோதே அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஆரம்பித்தோம். விமான
நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தோம்.
கொவிட் தொற்று நெருக்கடியின்
போது அனைத்து பணிகளையும் நிறுத்தி முன்னோக்கி செல்ல முடியாது. அதனாலேயே
அவ்வாறானதொரு சவால்மிகுந்த தருணத்திலும் அபிவிருத்தி குறித்து சிந்திக்கின்றோம்.
அதிவேக நெடுஞ்சாலை, நூறு நகர
அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மாத்திரமல்ல துறைமுக மேற்கு முனையத்தை
நிர்மாணிப்பதற்கும் ஆரம்பித்தோம். இந்த நாட்டின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை
உள்ளது. கடந்து சென்ற இரண்டு ஆண்டுகளை எண்ணி கவலைப்பட்டு பயனில்லை. அது
எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் முக்கியம். அடுத்த மூன்றாண்டுகள் என்பதுதான்
அரசுக்கு முக்கியம். அந்த மூன்று வருடங்கள் முக்கியமானவை. நாம் எதிர்காலத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும்,
கடந்த காலத்தை அல்ல.
கடந்த காலத்தை அரசாங்கம்
திரும்பப் பெற முடியாது. அதற்கு ஏற்றால் போல் செயல்பட்டால் மாத்திரமே அதனை
திரும்பபெற முடியும்.
நாம் எதிர்கொண்டுள்ள கசப்பான
சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுநோய் நம்மை இழுத்துச்
சென்றிருக்கும் படுகுழி இந்த துறைமுகத்தை விட ஆழமானது என்று நான் நினைக்கிறேன்.
அதை மக்களிடம் இருந்து மறைக்க விரும்பவில்லை.
மக்கள் எதிர்கொண்டுள்ள
சிரமங்களுக்கு நாமே பொறுப்பு. பொருட்களின் விலையேற்றத்தைவிட வரிசையில் நிற்பது
என்பது சிறந்த விடயமல்ல என எமது மக்கள் நம்மிடம் கூறுகின்றனர். எங்களுக்கு அது
தெரியும். இந்த அரசு தமது சொந்த வசதியைப் பற்றி சிந்திக்கவே இல்லை. தன் வசதி
குறித்து மாத்திரம் அரசாங்கமாக இருப்பின் நிதி நெருக்கடி நிலவும் போது மக்களுக்கு
பல நூறு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யாது.
இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி
ஆரம்பத்தில் எமது சொந்த பணத்திலேயே நிர்மாணிக்கப்பட்டது என்பதை நீங்கள்
அறிவீர்கள். இந்த கிழக்கு முனையம் துறைமுக அதிகாரசபை தனது சொந்த நிதியில் கட்ட
திட்டமிட்ட முனையமாகும். ஆனால் அந்த முனையத்தை நாங்கள் கட்டுவதற்கு முன்பே, நாங்கள்
தோற்கடிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். எவ்வாறாயினும், நல்லாட்சி
அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை அன்றே நிறுத்தியது. துறைமுகம் மட்டுமின்றி நாடு
முழுவதும் எங்களது திட்டத்தை நிறுத்தியது. அந்த அரசாங்கம் இந்த முனையத்தை
உருவாக்கவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யவோ விரும்பவில்லை.
அடக்குமுறைக்கு மத்தியிலேயே
அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பத்திரிகையாளர்களின் காதுகள் துளைக்கப்பட்டன. ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தச்
சென்ற மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிற்சங்கங்கள் தலைதூக்க
அனுமதிக்கப்படவில்லை. தேரர்களின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கவில்லை. அன்று
இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இங்கு மட்டுமல்ல மொனராகலையில்
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கொழும்பில் இருந்து
கண்ணீர் புகை லொரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் நாம் கட்டியெழுப்பிய
வளங்கள் வெளிநாடுகளுக்கு கையளிக்கப்பட்டன.
அத்தகைய நிலைமையின் கீழ் இருந்த
ஒரு நாட்டையே நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இரு முனைகளில் எரியும் தீபத்தை அணைப்பது
மிகவும் கடினம். ஒரு புறம் நல்லாட்சி அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்த ஒப்பந்தங்கள், மறுபுறம்
அவற்றை விடுவித்து அபிவிருத்தி செய்வது.
நாம் இந்த முக்கிய பகுதிகளை
விடுவித்து அவற்றை அபிவிருத்தி செய்ய பணம் தேட வேண்டும். இத்தனைக்கும் மத்தியில்
நாம் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் போன்று மக்களை அடக்க
முடியாது. நாங்கள் செய்வதில்லை. அவர்கள் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில்
சர்வதேச அளவில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த முனையம் தொடர்பான தேசத்தின்
அபிலாஷைகளைப் பாதுகாக்க நாம் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நாம்
ஆட்சிக்கு வந்ததும் ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதாக உறுதியளித்த நாடு
இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த பிரேரணையில் இருந்து விலகிக் கொண்டோம்.
நாங்கள் வந்தே அந்த பிரேரணையிலிருந்து விலகிக் கொண்டோம். நாங்கள் கையெழுத்தான
எம்.சி.சி. ஒப்பந்தத்தை நிறுத்தினோம். இவற்றின் விளைவுகள் நமக்கு வந்துகொண்டே
இருக்கின்றன. இதை நாட்டை நேசிக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2015க்குப் பிறகு
நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாட்டின் மீதான நம்பிக்கையை
கைவிடாதீர்கள். கடந்து சென்ற இரண்டு வருடங்களை விமர்சகர்களுக்கு விட்டுவிடுவோம்.
எதிர்காலத்தை நாங்கள் பொறுப்பேற்போம் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.