பேருவளை நகர சபையால் ஒருகோடியே 94 இலட்சம் ரூபாய்க்கு விலைமனு கோரல் ஊடாக வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய இறைச்சி விற்பனை நிலையம் நேற்றுமுன்தினமும்(10), நேற்றும் (11) மூடப்பட்டிருந்தது. அத்துடன், அங்கு விற்பனை செய்யப்படும் இறைச்சியின் விலை தொடர்பிலும் ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருவளை நகரசபையின் நேற்றைய (11) கூட்டத்திலேயே இது தொடர்பில் ஆராயுமாறு நகரசபையின் வருமான வரிப் பரிசோதகர்களுக்கு அந்த நகரசபையின் மேயர் மசாஹிம் மொஹமட் உத்தரவிட்டுள்ளார்.
இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அந்நகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹசான்பாசி, அந்த உரிமையாளர் நகரசபைக்கு செலுத்த வேண்டிய 48 இலட்ச ரூபாய் வரிப்பணத்தை இது வரையில் செலுத்தவில்லை எனவும், வெறும் 16 இலட்சம் ரூபாயை மாத்திரம் செலுத்தி இறைச்சி விற்பனை நிலையத்தை திறந்துள்ளார் என்றார்.
இதேவேளை இந்த இறைச்சி விற்பனை நிலையத்தின் செயற்பாடுகளால் பேருவளை நகரசபைக் கூட்டத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டிருந்தது.