அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சலுகைப் பொதி உண்மையில் ஒரு சலுகைப் பொதியல்ல. சலுகைகள் அற்ற பொதியே வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பணத்தை அச்சடித்து, பணவீக்கத்தை உயர்த்தி விட்டு,வழங்கப்படும் நிவாரணப் பொதியின் முடிவு என்னவாக இருக்குமென்பது விரைவில் விளங்கம் என்றார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியே ஆட்சிக்கு வந்தது. இன்று நெருக்கடிக்குள் அவ்வரசாங்கம் உள்ளாகியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை தலைமை அலுவலகத்தை, நேற்று (06) திறந்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்மையாரின் 70-77 காலப்பகுதியில் நாட்டில் வரிசைகளில் நிற்கும் யுகம் இருந்தது. மூடிய பொருளாதாரத்தால் இந்நிலைமை ஏற்பட்டிருந்தது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், திறந்த பொருளாதாரம் உள்ள தற்போதைய சூழ்நிலையிலும் கூட, அரசாங்கத்தின் பொறுப்பற்ற,தூரநோக்கற்ற மற்றும் சீர்மையற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இன்று வரிசைகளின் யுகம் உருவாகியுள்ளது என்றார்.
அமைச்சரவையையும் அரசாங்கமும் முட்டாள்தனமான முறைமைகளை கையாண்டு வருகின்றமையால், தேசிய சொத்துக்கள் விற்கப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பிரதானிகள் மக்கள் நலனுக்காகத் தீர்மானங்களை எடுக்காமல் தமது சொந்த நலன்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றனர் என்றார்.