அரசியல் தலைவர்கள் மீண்டும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.
தேசிய ரீதியாகவுள்ள தமிழ் கட்சிகள் ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
ஊடக அறிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த ஆவணத்தை அனுப்புவதன் ஊடாக இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.
ஆட்சியிலுள்ள தரப்பினர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை கையிலெடுத்துள்ள நிலையில், 13 ஆவது அரசியலமைப்புச் சட்டம் அகற்றப்படும் அபாயமுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழர்களின் அபிலாஷைகளை 13 ஆவது அரசியலமைப்பு முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் முதலில் இந்த இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, தொடர் தாமதங்களை தவிர்த்து மிக விரைவாக கூட்டு ஆவணத்தை பாரதப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.