கட்டிடமொன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் 7 மாடி கட்டிடமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது, அவரின் உடலில் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பம்பலப்பிட்டி கிரெட்ஸர் பிளேஸில் உள்ள 7 மாடி கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றில் வசித்து வந்த குறித்த சிறுவன், கடந்த 29 ஆம் திகதி அக்கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
அவர் தனது பெற்றோருடன் குறித்த குடியிருப்பு தொகுதியில் 5 ஆவது மாடியில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த கட்டடத்தில் இருந்த சிசிரீவி காட்சிகளை மையமாகக் கொண்டு அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த மாணவன் முச்சக்கர வண்டியில் வருகை தருவது மற்றும் மாடியிலிருந்து தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த CCTV கமராக்களில் பதிவாகியிருந்தன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.