சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸார் 32 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பிலியந்தலை பொலிஸாரினால் 25 பேரிடமும், கெஸ்பேவ பொலிஸாரினால் 7 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்திற்கு அருகில் உள்ளவர் உட்பட 32 பேரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நேற்றைய தினம் (14) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்ததோடு தொலைபேசி தரவுகளை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியையும் பெற்றனர்.
இதற்கமைய இன்றைய தினமும் (15) இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதோடு, விசேட பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.