கேரளாவில் கணவருக்கு உணவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தை 7 வருடங்களாக கணவனுக்கு கொடுத்து வந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் சங்கர் -ஆஷா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2006 -ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் சதீஷ் செய்து வந்த தொழில் லாபகரமாக இல்லை நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார். தற்போது சதீஷ் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். 2012-ல் தொடங்கப்பட்ட ஐஸ்கீரிம் வியாபாரம் லாபத்தை கொடுக்கத் தொடங்கியது. பாலக்காட்டில் சொந்தமாக வீடு கட்டி அங்கு குடியமர்ந்தனர். கடந்த சில வருடங்களாக சதீஷ் தினமும் இரவு உணவு அருந்தியவுடன் தூக்கம் வந்துவிடும். மேலும் அவருக்கு உடலும் சோர்வாக இருந்துள்ளது. சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்துள்ளார். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார் இருப்பினும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 7 வருடங்களுக்கு மேலாக அவருக்கு இந்தப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒரு 20 நாள் வீட்டில் சாப்பிட வேண்டாம் என முடிவு செய்து வெளியில் சாப்பிட்டு வந்துள்ளார். அப்படி அவர் வெளியில் சாப்பிட்ட நாள்களில் உடலில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. சாப்பிட்ட உடனே தூக்கமும் வரவில்லை உடல் சோர்வும் அவருக்கு இல்லை. இதனையடுத்து வீட்டு சாப்பாட்டில்தான் ஏதோ பிரச்னை என்று உணர்ந்தார். வீட்டு சமையலறையில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க தொடங்கினார். அப்போது மனைவி உணவில் எதோ ஒரு திரவத்தை கலப்பதை கண்டார். அவரது மனைவி உணவில் தூக்க மாத்திரை கலந்துக்கொடுக்கிறாரா என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.
தோழி சொன்ன அதிர்ச்சித் தகவல்
இதனையடுத்து சதீஷ் தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்னைகளை கூறியுள்ளார். என் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார். ஆனால் மனைவியின் தோழி கூறியதைக் கேட்டு சதீஷ் அதிர்ந்துப்போனார்.ஆஷா உங்களுக்கு உணவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து வருகிறார். என் கணவருக்கு இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்தார். அப்போது தான் கணவன் நம் சொல்படி இருப்பார்கள் என்று அறிவுரை கூறினார். நான் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும் ஆஷா அனுப்பிய மாத்திரைகளின் போட்டோ ஆடியோ மெசேஜ்களையும் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் தன் மனைவி மீது பாலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆஷாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “ சதீஷ் தன் மனைவி ஆஷாவை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் செக்ஸ் டார்சர் கொடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் எப்போதும் கடுமையாக நடந்து வந்துள்ளார். அவரது கொடுமைகளை பொறுக்க முடியாமல் மனநலம் பாதிப்புக்கு பயன்படுத்தும் மாத்திரையை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களையும் தன் பெயரில் மாற்றிக்கொள்ள திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
ஆஷாவின் தோழியிடம் இருந்து செல்போன் உரையாடல்களில் சில அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளதாக மனோரமா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஷா தன் தோழியிடம் பேசும்போது தன் அப்பாவுக்கு என் அம்மா இந்த மாத்திரையைத் தான் கொடுத்தார். அவர் இப்போது பல் இல்லாத சிங்கம் போல் இருக்கிறார். நீயும் உன் கணவருக்கு கொடு எனக் கூறியது தெரியவந்தது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆஷா தன் கணவருக்கு இந்த மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் ஆஷா தன் மூத்த மகளிடம் இந்த மருந்து கலக்கும் விவகாரத்தை கூறியுள்ளார். 7-வது படிக்கும் தன் மகளிடம் அப்பா இந்த மருந்தை சாப்பிட்டால் தான் கடுமையாக நடந்துக்கொள்ள மாட்டார். அவர் நோயில் இருந்து குணமாக இந்த மருந்தை கொடுப்பதாக கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆஷாவின் தாய் தன்னுடைய இன்னொரு மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத்திரைகள் குறித்து ஆய்வகத்தில் விசாரித்ததில் இந்த மாத்திரைகளை உட்கொள்வது, மனநல பாதிப்பு அல்லது மரணத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.