Our Feeds


Thursday, February 3, 2022

ShortNews

‘சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ - மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

 




சிறீ லங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் நாளை முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து
இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த  போராட்டத்தில்  அனைவரையும் பங்குகொள்ளுமாறு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான   தவத்திரு வேலன் சுவாமிகள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  சங்க உப செயலாளர் இரதீஸ்வரன் சபிதா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், “பெப்ரவரி 4 ஆம் நாள் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தினை முழுமையாக பகிஷ்கரித்து அது தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற அடிப்படையில் தமிழர்களாக சுயர்நிர்ணயத்துக்காக போராடி வருகின்ற மக்களாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம் இந்த ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்றுகூடி தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற தொனிப்பொருளில் எங்கள் உணர்வுகளையும் உரிமைக்கான குரலையும் எடுத்துக் காட்டவேண்டும்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் தலைமையேற்று போராட்டத்தை நடத்த இருக்கின்றார்கள். எங்கள் தாய்மார்கள் கடந்த 12 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்று நீதி கோரி போராடி வருகின்றார்கள்.

சிவில்அமைப்புக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதரவு கொடுக்கவேண்டும்,
பாதிக்கப்பட்ட தரப்புக்கள், பொதுமக்கள், மதகுருமார்கள், சிவில் சமூகங்கள், பல்கலைக்கழக
மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மாதர் சங்கங்கள் சமூக மட்டத்தில் இருக்கும் அத்தனை பொது கட்டமைப்பும் இதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று அன்பாக
வேண்டிநிக்கின்றோம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான மக்கள் பேரெழிச்சி இயக்கமும் தன்னுடைய ஆதரவினை வெளிப்படுத்தி நிக்கின்றது.

ஈழத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி உற்று இன்று எங்கள் எதிர்பினை பதிவுசெய்யவேண்டிய
தேவை உள்ளவர்களாக நாங்கள் இருக்கின்றோம். எந்த இடத்தில் எங்கள் இன அழிப்பு
நடைபெற்றதோ,எந்த இடத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தார்களோ எந்த இடத்தில்

எங்கள் போராட்டம் மௌனிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து நாங்கள் மீண்டும் எழுவோம்
என்பதை இந்த போராட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.
முள்ளிவாய்க்கால் மண் எங்கள் இனத்தின் பரிகார நீதிக்கான ஆரம்ப இடமாக அமைந்துள்ளது.
எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம் அதற்கு என்ன நடந்தது என்று இதுவரை
தெரியவில்லை நீதி கேட்டு எங்கள் தாய்மார்கள் நீண்டகாலமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனை கருத்தில் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தொடங்கி வட்டுவாகல் பாலம் ஊடாக  முல்லைத்தீவு நகர் வரை பேரணியாக சென்றடையவுள்ளோம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவினை தரவேண்டும் எங்கள் தமிழ் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளை வைத்து இனஅழிப்பிற்கு பரிகார நீதியாக எங்கள் இனத்தினை நோக்கி ஒரு திசையில் பொதுசன வாக்கெடுப்பு  என்ற நோக்கில் இந்த எழுச்சியினை வெளிக்கொண்டு வருகின்றோம்.இதற்காக அனைவரும் ஒத்துளைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »