(நூருல் ஹுதா உமர், சலீம் றமீஸ் )
நானும் அவரும் சட்டபீட மாணவர்களாக இருந்தபோது நானும் அவரும் சட்டபீடத்தில் விரிவுரையாளராக கடமையாற்ற வேண்டும் எனும் கனவை மறைந்த அஷ்ஃரப் தன்னுள் வைத்திருந்தார். அவரது கனவை நிஜமாக்கும் பொறுப்பு இன்றைய பல்கலைக்கழக சமூகத்ததுக்கு உள்ளதென உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரின் தலைமையில் கலைப்பீட மாணவர்களுக்கான பட்டமளிக்கும் நிகழ்வாக இடம்பெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக 14 ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது நாளின் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்றால் மறைந்த அஷ்ஃரப் அனைவருக்கும் நினைவில் வருவார். அரசியலிலிருந்து ஓய்வுபெற்று சட்டபீட மாணவர்களுக்கு தனது சட்டம் சார்ந்த அறிவை வழங்க வேண்டும் எனும் அவா அவருக்கு இருந்தது. அவரது கனவுகள் மிக தூரநோக்கு கொண்டதாக அமைந்திருந்தன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் மட்டுமின்றி வைத்தியபீடமும் காலத்தின் தேவையாக உள்ளது. கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இணைத்துக் கொண்டு மருத்துவ பீடத்தை உருவாக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.
எதிர்காலம் ஆங்கிலத்தை மையமாக கொண்டுள்ளதால் எதிர்கால உயர்கல்வி பாடத்திட்டங்கள் ஆங்கில மொழிமூலமே அமைய வேண்டும். இதனை மலேஷியா, சிங்கபூர் போன்ற நாடுகள் இந்த கொள்கையை வெகுவாக பின்பற்ற ஆரம்பித்து விட்டன. நாம் எதிர்கால சந்ததியினரை கருத்தில்கொண்டு எமது திட்டங்களில் பாரிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
