கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்பின் காரணமாக சில தனியார் கல்லூரிகளிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் ஹிஜாப் - முகத்தை திறந்து தலையை மறைக்கும் வகையிலான ஆடை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பி.யூ.கல்லூரியில் 6 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது.
இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அப்போது கல்லூரி நிர்வாகம் காவி துண்டு போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் கோரியது. அதற்கு மாணவர்கள் தரப்பில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதால் தாங்களும் காவி துண்டுடன் வகுப்பறைக்கு வருவதாக கூறினர்.
இதுகுறித்து குந்தாப்பூர் கல்லூரி மேம்பாட்டு குழு தலைவரும் MLA வுமான ஹலடி சீனிவாச ஷெட்டி கூறுகையில், “முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்தால் கடலோர கர்நாடக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த மாணவிகளை கண்டிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவி துண்டு போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இதனால் பெற்றோர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க இருக்கிறோம்''என்றார்.