இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் சர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் விவகாரத்தில் மத்தியில் ஆளும் மோடியின் பாரதீய ஜனதா கட்சி விளக்கமளிக்க வேண்டும் என கோரி இந்திய பாராளுமன்ற மக்களவையிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), காங்கிரஸ், மற்றும் பல எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
இதே வேலை கர்நாடகாவில் பல இடங்களில் ஹிஜாபுக்கு எதிராக மாணவர்களில் ஒரு தரப்பினர் வன்முறையை கையிலெடுத்ததில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் பொலிஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று இந்திய நாடாளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை ஏற்க மறுப்பதாகக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
