ராகமயில் அமைந்துள்ள, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கமைய குறித்த அனைவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு கார், களுபோவில பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (02) அதிகாலை, வௌியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்திருந்த நிலையில், 23 வயதான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் நேற்றிரவு (02) ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேசகநபர்களை அடையாள அணிவகுப்பில் உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.