ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஹிஜாப்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பல பியூ கல்லூரிகளும் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் போராட்டம் நடத்திய இஸ்லாமியப் பெண்களை சில கல்லூரி நிர்வாகங்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தன. பின்னர், உள்ளே அனுமதித்தாலும் அவர்கள் தனியாக அமர வைத்து, பாடங்களை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.. இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பதற்றம்
குறிப்பாக முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்தனர். மேலும், சில இந்துத்துவ மாணவர்களும் காவி நிற துண்டு அணிந்து வந்ததால் பதற்றம் அதிகரித்தது. இந்த ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விவகாரங்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
விசாரணை இதையடுத்து இது தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கைக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் முன் விசாரித்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் முதலில் உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
தடை
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்லூரிகளைத் திறக்க உத்தரவு
ஹிஜாப் விவகாரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குக் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹிஜாப்புக்கு அனுமதி கேட்ட வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.