சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு போதுமானளவு பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கெஸ்பேவ நீதவான் ருவன்திகா வீரசிங்க, பொலிஸ் விசேட பிரிவிற்கு நேற்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலியந்தலை பகுதியிலுள்ள சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது கடந்த 15ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோக சத்தமும் கேட்டதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு, கெஸ்பேவ நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.