நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்துண்டிப்பு மேற்கொள்வதற்கான அவசியமில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.
அதற்கமைய, குறுகிய காலப்பகுதிக்கு தனியார் நிறுவனங்கள் தனியான ஜெனரேட்டர்கள் இருந்தால் அவற்றினூடாக மின் உற்பத்தியை பெற்றுகொள்ள முடியுமென்றும், முடிந்தளவுக்கு இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தாா்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டாா். அதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதையளவுக்கு தேவையான மின் உற்பத்தி தற்போது இடம்பெறுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய தொடர்ந்து மின்வெட்டு இடம்பெறாது.
ஒருவேளை மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழக்கும் பட்சத்தில் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
100 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையம் செயலிழக்குமாக இருந்தால் மின்வெட்டு இடம்பெறாது. அதற்கு மேற்பட்ட மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்தால் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணிநேர மின்துண்டிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டாா்.