சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிப்பதற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 2 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்து இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு அமைவாக அவர் இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க கடந்த 28 ஆம் திகதி மீண்டும் புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்தது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சி விசாரணைகள் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போதே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ முன்வைத்த பிணைக் கோரிக்கை குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேவர்தனவினால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்த நிலையில் தற்போது புத்தளம் மேல் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.