உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் எட்டாவது ஆண்டு சர்வதேச மாநாட்டு நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதினை கலாநிதி வி. ஜனகன் அவர்கள், கௌரவ அமைச்சர் K.T மஸ்தான் (தமிழ்நாடு) அவர்கள் கைகளால் பெற்றுக்கொண்டார். இலங்கை பாராளுமன்ற கௌரவ உறுப்பினர் M.A சுமந்திரன் மற்றும் இந்தியாவின் VIT பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி G விஸ்வநாதன் அவர்களின் முன்னிலையில் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டது.
உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பானது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாநாடுகளை நடாத்தி திறமையான தமிழர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கான விருதுகளையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு சென்னையில் சர்வதேச வர்த்தக மண்டபத்தில் 11 /03/ 2022 இல் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களில் இருந்து தமிழ் தலைவர்களும் தமிழ் வர்த்தக பிரமுகர்களும் மற்றும் கல்வியாளர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் இலங்கையில் இருந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடத்துறை சார்ந்த பிரதானிகளும் பங்குபற்றியிருந்தார்கள்.
கலாநிதி வி. ஜனகன் அவர்களின் பெயரினை சாதனைத் தமிழன் விருதிற்கு உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு. செல்வக்குமார் அவர்கள் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிகழ்வில் இலங்கை உட்பட்ட உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் விருதுகளை பெற்றார்கள் என்பது இங்கு சிறப்பான விடையமாகும்.
இந்த நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்வுகளும் ஒன்றுகூடல்களும் இடம்பெற்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தி அவர்களின் திறமைகளை பறைசாற்றும் வகையில் விருதுகளையும் கௌரவங்களையும் உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு வழங்கிவருகின்றது மேலும் இந்த செற்பாடு இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் திரு. செல்வக்குமார் அவர்கள் நிகழ்வில் குறிப்பிட்டார்.