(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்களின் வெறுப்பை பெற்றுள்ள அமைச்சரவை முழுமையாக கலைக்கப்பட வேண்டும். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஜனாதிபதி ஒரு சில அமைச்சுக்களை மாற்றியமைத்தால் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி எமக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஒருவேளை அழைப்பு விடுத்தால் அதனை பரிசீலனை செய்வோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலின போதும் நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமிக்க அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.
நாட்டு மக்கள் வழங்கிய வழங்கிய அரச அதிகாரம் தவறான முறையில் குடும்ப ஆட்சியாக பயன்படுத்தப்பட்டதால் முழு அரச நிர்வாக கட்டமைப்பும் பிரச்சினைக்குள்ளானது.மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதன் விளைவை அரசாங்கம் தற்போது நன்கு அனுபவிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.