பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு வழிவிடுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கோரியிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அலகபெருமவின் கருத்துக்களை, தான் ஆமோதிப்பதாகவும் சரித்த ஹேரத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைத்து விரைவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். டலஸ் அலகபெரும பரிந்துரைத்தபடி மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று நான் கருதுகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
06 தொடக்கம் 08 மாதங்களுக்கு ஒரு தேசிய, பராமரிப்பு வகையான சிறிய அரசாங்கத்தை நியமிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் துரிதப்படுத்தப்பட்டு பொருளாதார மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
03 மாதங்களுக்குள் அரசியலமைப்புக்கான 21வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் திட்டம் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 08 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.