கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு மன்னிப்புக் கூறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளிட்ட போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 14 நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இந்த தீர்மானம் தொடர்பில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு உரிய பதிலின் அடிப்படையிலே தீர்மானம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில், கட்சியின் ஒழுக்கத்தை மீறிய ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் ஹரீன் மற்றும் மனுஷா இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.