(பாறுக் ஷிஹான்)
15 வயதான சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கியதாக கூறப்படும் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் தாய் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 26 அன்று வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கல்முனை பொலிஸ் பிரிவில் சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதான ஒருவரையும் உடந்தையாக செயற்பட்டார் எனக் கூறப்படும் சந்தேக நபரின் தாயையும் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை (27) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது பிரதான சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக செயற்பட்டார் எனக் கூறப்படும் அவரின் தாயை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்லுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.