கோட்டா கோ கமவில் இடம்பெறும் 50 நாள் போராட்டத்தின் செய்திக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அவர்கள் தேடும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை உறுதி செய்யாமல் நாடு சிறந்த எதிர்காலத்தை அடைய முடியாது என்பதை முழு சமூகமும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தை அடிப்படையாகக் கொண்டு சிவில் சமூகம், குறிப்பாக இந்நாட்டு இளைஞர்கள் நடத்திய போராட்டம், அண்மைக் காலத்தில் இந்த நாட்டில் வேறு எந்த அரசியல் மற்றும் சிவில் இயக்கங்களாலும் சாதிக்க முடியாத பல விடயங்களை வென்றெடுத்துள்ளது.
இந்த நாட்டில் நடைபெற வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பலவற்றிற்காகவும் அவர்கள் வெற்றிகரமாக வாதிடுகின்றனர். இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரும் அவர்களின் செயலுக்கு மரியாதை மற்றும் வணக்கம் செலுத்த வேண்டும்.
இதேவேளை அவர்களின் அசைக்க முடியாத குரலுக்கு அரசாங்கம் உடனடியாக செவிசாய்க்க வேண்டும். அவர்கள் விரும்பும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளைப் பெறாமல் இந்த நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்காது என்பதை முழு சமூகமும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும் எனவும் அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.