(கனகராசா சரவணன்)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிமின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தமை தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த நால்வரை சட்ட மா அதிபரின் ஆலோசனையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் இன்று செவ்வாய்க்கிழமை (31 ) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்துவரப்படாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த நால்வரை தலா 50 இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப் பிணையிலும் தலா 50 ஆயிரம் ரூபா கொண்ட ரொக்கப் ப்பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
மாத இறுதி வார ஞாயிற்றுக்கிழமை காலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையொழுத்திடவேண்டும் எனவும் ஏனைய 51 பேரையும் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.