சட்டவிரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பணவுகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளது.
சட்ட மா அதிபர் ஊடாக இதனை சுகாதார அமைச்சு நேற்று (07)மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்து.
சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பணவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறுகோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) மனு நேற்று (07) மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.