Our Feeds


Monday, June 13, 2022

ShortTalk

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு 18 மாதங்கள் ஆகும் - பிரதமர் ரனில்



தற்போதைய நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


இந்திய ஊடக வலையமைப்பான WION உடன் பேசும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.


தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


பிணை எடுப்புப் பொதி தொடர்பில் அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.


அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பு கோரும் அதே வேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.


இலங்கையின் கடன் நிலையான மட்டத்தில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும், எனவே பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்மொழியப்பட்டவாறு அரசாங்கம் 2020 இல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.


ஐக்கிய நாடுகள் சபையால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு முழுமையான அவசரநிலையை இலங்கை எதிர்கொள்கிறது என்றும் உலக வல்லரசுகளின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் ஒப்புக்கொண்டார்.


ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இலங்கையை போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.


அதிக முதலீடுகளை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தையும், நாட்டில் இயங்கும் தனியார் துறையைக் கொண்டிருப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.


தனது இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடனை மீளச் செலுத்துவதற்கும், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், நலிவடைந்த மக்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்குவதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக வரி முறையை சீர்திருத்துவதற்கும் கூடுதல் நிதியை வழங்குவதற்கு முன்மொழிவதாக குறிப்பிட்டார்.


இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும் என்பதால் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.


பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை ஸ்திரப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் 21வது திருத்தம் போன்ற சில அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.


மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், பாராளுமன்றத்தில் அனைத்து தரப்பினரின் ஆதரவை நாடுவதாகவும் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்தார்.


வெளி காரணிகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகிறது, ஆனால் இந்தியா பல முனைகளில் அரசாங்கத்திற்கு கடுமையாக ஆதரவளித்து வருகிறது.


அவர்கள் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், இந்திய அரசாங்க அதிகாரிகள் பலருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் காலத்தின் தேவையாகும் என பிரதமர் தெரிவித்தார்.


கூடிய விரைவில் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், எனவே அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் தனக்கு ஆதரவு தேவை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »