(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் புதிய தலைவராக மீண்டும் நான் மூன்று வருடகாலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அத்தெரிவு ஜனநாயக ரீதியில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றது என்றாலும் தலைமைப்பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா (Isthikhara) செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக்குழுவிடம் ஒருவாரகால அவகாசம் கோரியுள்ளேன்” என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் புதியநிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக்கூட்டம் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை கண்டி கட்டுக்கலை ஜும் ஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது. நிகழ்வில் உலமாசபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். கலீல் கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தார். அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்விமுப்தி தலைமை உரை நிகழ்த்தினார்.
எதிர்வரும் 3 வருட காலத்துக்கு தலைவராக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி சுமார் 20 வருட காலமாக 9 தடவைகள் தலைவராக தெரிவு செய்யப்பட்டவராவார். இவர் 2001 இல் உலமா சபையின் யாப்பு முறையாக அமையவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது தலைமைப்பதவியை இராஜினாமா செய்தார் என்றாலும் 2003 ல் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 2004 ன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்திற்கும் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் 2016 ல் மற்றும் 2019 ல் தான் பதவியிலிருந்து அகலுவதற்கு அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Vidivelli