எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சேவை நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வைத்தியர்கள் உரிய நேரத்துக்கு வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடருமேயானால் இன்னும் ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம் பெற்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில், வாகனங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மையால் பொதுப்போக்குவரத்து உள்ளடங்கலாக ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் படிப்படியாக செயலிழக்கும் நிலையேற்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுகாதாரத்துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைவரம் குறித்து வினவியபோதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.