(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு அனுமதியை வழங்குவதற்காக அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணி பிரித்து விற்பனை செய்து அதில் மக்கள் குடியேறியுள்ளனர்.
இந்தக் காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான எஸ் வியாழேந்திரனின் எம்பியின் சகோதரர் ஒருவர், இந்தக் காணி போலி உறுதி என அனுமதி வழங்காது முடியாது என அவர்களிடம் தெரிவித்துள்ளனர்;.
இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதி வழங்க முடியாது என குறித்த நபர்களால் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் வியாழேந்திரனின் சகோதரரிடம் குறித்த காணியை சட்ட ரீதியாக காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி, எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக கூறு போட்டு குடியிருப்புக்காக விற்பனை செய்து வருவதாக தெரிவித்த நிலையில் சந்தேக நபரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபை அனுமதியை வழங்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக தருமாறு அவரிடம் கோரியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததனர்.
அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான நேற்று மாலை 6.30 மணியளவில் இலஞ்சம் கோரியவர்களிடம், 15 இலட்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹோட்டலுக்குச் சென்று கோரிய 15 இலட்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
இதன்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.