(எம்.எப்.எம்.பஸீர்)
கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு செல்ல முற்ப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ரவின் பயணத்தை தடுத்து, அந்த பாதையை பொலிஸார் முற்றாக மூடி பொலிஸ் படையணி குவிக்கப்பட்டதால் இன்று ( 28) நண்பகல் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிஐடியில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.க்கு முன்பாக சென்றிருந்த ஹிருணிகா பிரேமசந்ர, பின்னர் அங்கிருந்து செல்லும் வழியில் வங்கிக்கு செல்ல முறப்பட்டுள்ளார்.
குறித்த பாதை ஊடாக ஜனாதிபதி மாளிகை வரை செல்ல முடியுமாக இருப்பதனால், உடனடியாக பொலிஸார் அப்பாதையை மூடி, வீதித் தடைகளை ஏற்படுத்தினர். பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
எனினும் வங்கிக்கு ஹிருணிகா பிரேமசந்ர தன்னுடன் இருந்த மேலும் இரு யுவதிகளுடனேயே செல்ல முறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹிருணிகா பிரேமசந்ர ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தனியாக ஆர்ப்பாட்டம் செய்தார்.
இந்த முட்டாள் ஜனாதிபதி அவ்வளவு பயமா?, பெண்கள் என்றால் கோட்டாவுக்கு அவ்வளவு பயமா…. அப்படியானால் வீடுகளுக்குள் இருக்கும் அனைத்து சகோதரிகளையும் நான் இந்த இடத்துக்கு அழைக்கின்றேன்…. வாருங்கள் ஒன்று சேர்ந்து இந்த முட்டாளை விரட்டுவோம்…. தனியாக என்னால் வங்கிக்கு கூட போக முடியவில்லை. பாதையை மூடுகின்றார்கள்… இவ்வளவு பொலிஸார் இருக்கின்றீர்கள் … நான் தனியாக சென்று கோட்டாவை என்ன செய்ய முடியும்…. வெட்கம் இல்லையா உங்களுக்கு….
இன்று உண்ண உணவில்லை… எனது பிள்ளைக்கு சுகமில்லாமல் நான் மருந்து பெற்றுக் கொள்ள இன்று காலை முதல் அனுபவித்த வேதனை, கஷ்டம் எனக்கு தெரியும்.. எனக்கே இந் நிலைமை என்றால் சாதாரண குடும்பங்களின் நிலை என்ன? மருந்து இல்லை… உணவில்லை… எரிபொருள் இல்லை.. இன்னும் என்ன பொறுக்க வேண்டி உள்ளது… வாருங்கள் இந்த முட்டாளை விரட்டி அடிப்போம்..’ என ஹிருணிகா பிரேமசந்ர கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்.