” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து ராஜபக்சக்களைதவிர, வேறு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அக்கட்சியில் இருந்து எவராவது ஜனாதிபதியானால் அக்கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்சக்கள் இழக்க நேரிடும். ” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
எதிர்கால ராஜபக்சக்களுக்காக (நாமல்) கட்சியை பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் மொட்டு கட்சி அல்லாத ஒருவரை (ரணில் விக்கிரமசிங்க – ஐ,தே.க.) ஜனாதிபதியாக்க மொட்டு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமட்டுமல்ல மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு, பிரதமர் பதவிக்கும் வரமுடியாது. அவ்வாறு வந்தாலும் அவர் மொட்டு கட்சி தலைவராகிவிடுவார். அதனால்தான் மஹஜன எக்சத் பெரமுன கட்சி தலைவரான தினேஷ் குணவர்தன பிரதமராக்கப்பட்டுள்ளார்.
சஜித்தை ஜனாதிபதியாக்கினால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, ராஜபக்சக்களுக்கு எதிராக அவர் அரசியல் முகாமொன்றை கட்டியெழுப்பிவிடுவார். ரணிலால் அது முடியாது. அவ்வாறு செய்யவும் மாட்டார். எனவே, ரணிலை, ராஜபக்சக்கள் தெரிவுசெய்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதேபோல ஊழல், மோசடிகளில் இருந்து தம்மை காக்கும் சிறந்த காவலன் ரணில் என ராஜபக்கச்கள் கருதுகின்றனர். ” – எனவும் அநுர குறிப்பிட்டார்.