ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வீசா பெறுவதற்காக விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது என, ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டா – பதவியிலிருந்து விலகுவதென உறுதியளித்த பின்னர், தப்பியோட முயற்சிக்கின்றார் என வெளியாகும் பேச்சுக்களுக்கு இடையில் அவரின் விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
முன்னர் இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமைகளைப் பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்போட்டிடும் பொருட்டு, தனது அமெரிக்க குடியுரிமையை அவர் கைவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற அவர், கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக மாறியுள்ளார்.
“சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக செல்வதற்கான பாதையை நாடினார். ஆனால் அது மறுக்கப்பட்டது” என்று கொழும்பை தளமாகக் கொண்ட அதிகாரியொருவர் இன்று செவ்வாய்கிழமை கூறியதாக ‘த ஹிந்து’ குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் இது தொடர்பில் ‘தி ஹிந்து’ கருத்து கேட்டபோதும், இன்னும் பதில் கிடைக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்; “அமைதியான, ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்தை அடைய ஒத்துழைக்க வேண்டும்” என்று அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
