Our Feeds


Tuesday, September 13, 2022

SHAHNI RAMEES

பஸ்ஸை திருடி காதலியை பார்க்கச் சென்ற 15 வயதான சிறுவன்: பிலியந்தலையில் சம்பவம்!


பிலியந்தலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்  இரவு இடம்பெற்றுள்ளது.

பிலியந்தலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் நான்கு பஸ்களின் சாரதிகள் தாம் முன்னர் கலந்துரையாடியவாறு பிலியந்தலை பஸ் நிலையத்துக்கு தமது பஸ்களுடன் வந்து அவற்றை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் துபாயில் நேற்று முன்தினம்  இரவு நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி கிரிக்கெற் போட்டியை வெளித்திரை ஒன்றில் தொலைக்காட்சி ஊடாக பார்வையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போதே குறித்த சிறுவன் அந்த பஸ்களில் ஒன்றை திருடி அதனைச் செலுத்திச் சென்றுள்ளான்.




இதனையடுத்து பிலியந்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த சிறுவனை மூன்று மணித்தியாலங்களின் பின்னர் பஸ்ஸுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் சந்தேக நபரான 15 வயதான சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட  விசாரணைகளில் தனது காதலியைப் பார்ப்பதற்காக பஸ்ஸை திருடியமை தெரிய வந்துள்ளது.

சந்தே நபரான சிறுவன் ஹோமாகம பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை திருடிச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சம்பவமும் முன்னர் இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »