(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் 167 கோடி ரூபா வருமான வரியை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் தொடர்புபடுத்தப்பட்ட பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன அலோசியஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இன்று ( 2) ஆஜராகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், டப்ளியூ. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அவரும், விரேந்ர ஜோசப் என்பவரும் மன்றில் ஆஜராகினர்.
இதனையடுத்தே அவர்களை கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க பிணையில் விடுவித்தார்.
தலா 225 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.
தேசிய வருமான வரி திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் 167 கோடி வரியை எவ்வாறு மீள செலுத்தப் போகின்றார்கள் என்பது குறித்து அடுத்த தவணையில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்க வேண்டும் என நீதிவான் அலோசியஸ், மற்றும் ஜோசப்புக்கு உத்தரவிட்டார்.